search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்கள் விலை வீழ்ச்சி"

    வரத்து அதிகரிப்பின் காரணமாக திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் இயங்கும் பூ மார்க்கெட்டிற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் பூக்கள் விளைச்சல் அதிகரித்தது. தற்போது நவராத்திரி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் பூக்களின் தேவை அதிகரிக்கும் என ஏராளமான விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    ஆனால் வரத்து அதிகரித்ததால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. கிலோ ரூ.300-க்கு விற்ற மல்லிகை ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.120-க்கும், முல்லை ரூ.200, செவ்வந்தி ரூ.30, காக்கரட்டான் ரூ.150, செண்டுமல்லி ரூ.30, சம்பங்கி ரூ.40, அரளி ரூ.150, ரோஜா ரூ.40 என வாங்கப்பட்டது.

    மழையில் பூக்களை பறிக்காமல் விட்டாலும் வீணாகி விடும் என்பதால் அதனை பறித்து மார்க்கெட்டிற்கு கொண்டு வந்த விவசாயிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. திருமண வைபவங்கள் குறைவாக உள்ளதாலும் புரட்டாசி மாதம் கோவில் திருவிழா மற்றும் நவராத்திரிக்காக மட்டுமே குறைந்த அளவு பூக்கள் விற்பனையாகிறது.

    கன மழை காரணமாக பல வியாபாரிகளும் மார்க்கெட் வருவதை நிறுத்தி விட்டனர். இதனால் விற்பனை மந்தமாகவே உள்ளது. இதனால்தான் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மழைக்காலம் முடியும்வரை இதே நிலை தொடரும் என்றும் அவர்கள் கூறினர்.

    கரூர் மாவட்டத்தில் பூக்கள் விலை வீழ்ச்சியடைந்ததால் பூக்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் நடையனூர், முத்தனூர், கவுண்டன்புதூர், சேமங்கி, மரவாப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி, முல்லைப்பூ, செண்டுமல்லி, அரளி, செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா, கோழிக்கொண்டைப்பூ போன்ற வகைகளையும், மருவு, துளசி  போன்ற தழை வகைகளையும் பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் பூக்கும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து லேசான கோணிப்பைகளில் போட்டுவைக்கின்றனர். பூக்களை வேலாயுதம்பாளையம், கொடுமுடி, பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், பரமத்தி தண்ணீர்பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கிச்சென்று பூக்களை கட்டி முழம் கணக்கிற்கு விற்பனை செய்கின்றனர். 

    கடந்த வாரம் குண்டு மல்லி பூ ஒரு கிலோ ரூ.400-க்கும், முல்லைப் பூ ரூ.400-க்கும், அரளி ரூ.80-க்கும், சம்மங்கி ரூ.70-க்கும், செவ்வந்தி ரூ.60-க்கும், ரோஜா ஒரு கிலோ ரூ.130-க்கும், கோழிக்கொண்டை ஒரு கட்டு ரூ.10-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.10-க்கும், ஆடாதுடை ஒரு கட்டு ரூ.10-க்கும் வாங்கி சென்றனர். 

    நேற்று குண்டுமல்லி பூ ஒரு கிலோ ரூ.200-க்கும், முல்லைப் பூ ரூ.200-க்கும், அரளி ரூ.60-க்கும், சம்மங்கி ரூ.50-க்கும், செவ்வந்தி பூ ரூ.50-க்கும், ரோஜா ஒரு கிலோ ரூ.90-க்கும், கோழிக்கொண்டை ஒரு கட்டு ரூ.6-க்கும், ஆடாதுடை ஒரு கட்டு ரூ.5-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.5-க்கும் வாங்கிச்சென்றனர். பூக்கள் விலை வீழ்ச்சியடைந்ததால் பூக்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    ×